அம்மாச்சி

                     

 

 

              ‘எல்லாமே முடிஞ்ச்சி போச்சு,நீ உடனே கிளம்பி வா’ என்று அலைபேசியில் தகவல் வந்ததும்,பரபரப்பாக கிளம்பினேன்.விமான நிலையத்தில் அமர்ந்து கொண்டு,அழுது கொண்டே வாட்ஸ் அப் டிபி மாற்றி,அந்தப் படத்தை பார்த்துக்கொண்டே பழைய நினைவுகளில் மூழ்கினேன்.என் முதல் பிறந்த நாள் முடிந்த உடனே அம்மாச்சியுடன் அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டேன் என்று என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன்.பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு சேரும்வரை அம்மாச்சி வீட்டில் தான் வளர்ந்தேன்.ஆச்சி இடுப்பில் உட்கார்ந்து கொண்டு “வேகமா நடங்க வேகமா” என்று சொல்லுவேன்.ஐந்து அடி உயரம் கூட இல்லாத ஆச்சி,என்னை ஐந்து வயதுக்கு பிறகும் சுமந்தார்.குச்சி ஐஸ்,வறுத்தகடலை,சோன்பப்டி,ஜவ்மிட்டாய் என்று தெருவில் விற்று கொண்டுவரும் அனைத்தையும் கேட்பேன்,வாங்கித்தருவார்கள்.ஆச்சியுடன் தினமும் காய்கறி மார்ககெட் செல்வேன், கலாக்காய்,கடுக்காப்பழம்,நெல்லிக்காய், கொடுக்காப்பழம்,பளம்ஸ் என சீசனுக்கு ஏற்ப அனைத்தையும் வாங்கிகொடுப்பார்கள்.கோயில்களுக்கு கூடவே சென்று,அங்கே பஜனை குழுவோடு தப்புதப்பாக ஆனால் சத்தமாக பாடுவேன்.”உங்க பேத்தியாவா?” என்று கேட்பவரிடம்”ஆமா! ஊரில் இருந்து வந்திருக்கா” என்பார் மலர்ச்சியாய்.”சரியான வாயாடி,ஆடுகாலி,ஆம்பிளை பயகல விட ஆட்டம் போடுது என்று சொன்னவர்கள் எல்லாம் ஆச்சியிடம் வகையாக வாங்கிக்கட்டிக்கொண்டார்கள்.

                       பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தபின் விடுமுறைகளுக்கு மட்டுமே ஆச்சி வீடு செல்ல முடியும்,ஆனால் வாரந்தோறும் என்னைப் பார்க்க வருவார்.அவர் வந்துதிரும்பும்போதெல்லாம் நான் அழுவேன்.”நீ அழுதால் நான் அடுத்த வாரம் வரமாட்டேன்”என்று பொய்யாக மிரட்டுவார்.”சரி அழமாட்டேன்” என்று திரும்பிப்பார்க்காமல் “டாட்டா,டாட்டா”என்று அழுதுகொண்டேபள்ளி  செல்வதுதிங்கட்கிழமை வாடிக்கை. அப்பா சினிமா பார்க்கவிடுவதில்லைஅதனால் அம்மாச்சி வீட்டில் இருக்கும்போது தினமும் ஒரு படம் பார்க்க தியேட்டர் போகவேண்டும்.பேய்ப்படம்,த்ரில்லர் என்றால்எனக்கு பிடிக்கும் ஆனால் கொஞ்சம் பயம்.முகத்தை பாதி மூடிக்கொண்டும்,பாதிக்கண்ணை திறந்து பார்ப்பேன்,”இந்த கண்ணை மூடிட்டு இருக்கத்தானா காசு கொடுத்து வந்து உட்கார்ந்து இருக்க,” என்றுகடிந்துகொள்வார்கள்.டீன்ஏஜ் வந்தபிறகு கூட பல காதல் படங்கள் பார்க்க ஆச்சி தான் எனக்கு கம்பெனி.ஆச்சி நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. 

 

                     எம்ப்ளாயிமண்ட் எக்ஸ்சேஞ்ச் இல் பதிவு செய்யும்போதும்,யூ.ஜி.சி எக்ஸாம் எழுதுவதற்கு நான் சென்றபோது கூட என்னுடன் வந்தது என் அம்மா ,அப்பா இல்லை என் ஆச்சி தான்.என்முதல் மாத சம்பளத்தில் எடுத்துக்கொடுத்த 350 ரூபாய் பெறுமான சேலையை சொந்த பந்தங்கள்,பக்கத்து வீட்டார் என அனைவரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டவர்.என் திருமணத்தின் போது,”இதை வைச்சி எதையாவது உங்களுக்கு தேவையானதைவாங்கிக்கோ” என்று கொடுத்த ரூபாய்நோட்டுக்களை பார்க்கும்போது,”எவ்வளவு நாட்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருப்பார்கள் ஆச்சி என்று ஆச்சர்யமும்,அழுகையும் வந்தது.என் குழந்தைகள் பிறந்தபோது ஆஸ்பத்திரில் இருந்து,மூன்று மாதம் கழித்து நான் சென்னை திரும்பும்வரை எனக்கு உதவியாக,இரவில் விழித்து என் குழந்தைகளைபார்த்துக்கொண்டார்கள்.அப்போதேஅவர்களுக்கு வயது 75 மேல் இருக்கும்.இறுதி ஊர்வலத்திற்கு தயாரான ஆச்சியை பார்க்க வந்ததில் பாதிப்பேர்,”உன்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள்”,”யாரும் உன்னை ஒன்றும் சொல்ல முடியாது” “இடுப்பை விட்டு கீழே இறக்கமாட்டார்கள்” என்றும் “85 வயசுக்கு மேலே ஆயிடுச்சு,நடக்க முடியலை இனி இருந்து கஷ்டபடவேண்டாம்ல” என்றெல்லாம் கூறி மனதைத் தேற்றினாலும் எனக்கு இழப்பு தான்,மறக்கமுடியாத,மறுக்கமுடியாத இழப்பு.அமரர் ஊர்தியின் பின்னே தெரு முனைவரை சென்று கடைசியாக,ஆச்சி!ஆச்சி! என்று சொல்லி குளிர்ந்த அந்தவிரல்களை தொட்டுப்பார்த்தேன்.இன்றும் அந்த சிலிர்ப்பை உணரமுடிகிறது.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Heartfelt word's tears rolling down.

    ReplyDelete
  5. I am also lucky for having this great women as my grandmother. Iron lady. Really I miss her.

    ReplyDelete
  6. A very emotional writeup Selvi.
    Reminded me of my grandma too.
    Keep writing.👍

    ReplyDelete
  7. U r really blessed with such a wonderful grandmother

    ReplyDelete
  8. என் ஆழ்ந்த அனுதாபங்கள் .அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!